''வண்டி எப்ப சார் கெளம்பும்''.. மக்கர் செய்த ட்ரீம்லைனர் - டென்ஷனான ஏர் இந்தியா பயணிகள்!!
சென்னை: இன்று சென்னையில் இருந்து டெல்லி கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரத்திற்கும் மேல் தாமதமானது.
ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்று இன்று காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு கிளம்ப வேண்டியது. விமானத்தில் பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். இந்நிலையில் விமானம் கிளம்பும் முன்பு அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் தாமதாக கிளம்பும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள் அமர்ந்திருந்த பயணிகள் சிப்பந்திகளிடம் தாமதத்திற்கான காரணத்தை கேட்டனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,
விமான தாமதத்திற்கான காரணத்தை சரியாக கூறவில்லை. மேலும் எப்பொழுது விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கவில்லை என்றார்.
பயணிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு மதியம் 1.45 மணிக்கு பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு முனையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். என்ன கோளாறு என்பது தெரிவிக்கப்படவில்லை. பயணிகள் டெல்லி கிளம்ப மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பழுதான விமானம் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் என்பதால் சிறப்பு பயிற்சி பெற்ற என்ஜினியர்களால் மட்டுமே அதை சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.