எமிரேட்ஸ் விமான விபத்து எதிரொலி: சென்னை- துபாய் இடையே விமான சேவை 3வது நாளாக ரத்து
சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் அனைத்துவிதமான விமான சேவைகளும் தொடர்ந்து, 3வது நாளாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் பயணிகள் விமானம், துபாயில் தரையிறங்கும்போது, திடீரென தீப்பற்றி எரிந்தது. பெரும் முயற்சிக்கு இடையே அதில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட 300 பேரை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இதில், துபாய் தீயணைப்புப் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைப்பதோடு, அந்நாட்டில் உள்ள அனைத்து விமான ஓடுபாதைகளை செப்பனிடும் பணிகளையும் துபாய் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், அந்நாட்டில் சர்வதேச பயணிகள் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, துபாய்க்கு கடந்த 2 நாட்களாக விமான சேவை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், 3வது நாளாக இன்றைக்கும் துபாய் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, சென்னை விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை - துபாய் மார்க்கத்தில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்களின் சேவை இன்று காலை ரத்துசெய்யப்பட்டு உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் சென்னை - துபாய் மார்க்கத்தில் தன்னுடைய அனைத்து விமான சேவையையும் ரத்துசெய்து விட்டது.
பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும். துபாய்க்கு செல்லும் மற்றும் துபாயில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டது என்று அந்நிறுவனம் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.