"தமிழிசை"யின் வேண்டுகோளை ஏற்று வானொலியில் "இந்தி" ஓசை நிறுத்தம்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வேண்டுகோளை ஏற்று வானொலியில் இந்தி ஒலிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அகில இந்திய வானொலியில் தினமும் நான்கு மணி நேரம் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தமிழக கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்தி திணிப்பு செயல் இது என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது வானொலியில் இந்தி விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
வேண்டுகோள்...
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மத்திய அமைச்சரிடம் வானொலியில் இந்தியில், விளம்பர நிகழ்ச்சிகளை 4 மணிநேரம் ஒலிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உத்தரவு...
உடனே மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, அந்த இந்தி விளம்பர ஒலிப்பரப்புகளை நிறுத்தும்படி உத்தரவிட்டார். தமிழக மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அவர் தெரிவித்தார்.
பாஜகவின் எண்ணம்...
உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி கூறிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘எந்த மொழியாக இருந்தாலும், அதை படிப்பதையும், ஏற்பதையும் மக்கள் தாமாகவே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றே பா.ஜனதா எண்ணுகிறது.
நல்ல உதாரணம்...
மாறாக எந்த நிலையிலும் மொழியை திணிப்பதை பா.ஜனதா கட்சி மேற்கொள்ளாது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்' என்று அவரிடம் தெரிவித்தார்' என இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.