ஸ்விப்ட், டிசையர் கார்களில் இப்படி ஒரு பிரச்சினையா? மாருதி சுசுகி முக்கிய அறிவிப்பு
Recommended Video
சென்னை: டிசையர் மற்றும் ஸ்விப்ட் வகை காரில் ஏர்பேக் கட்டுப்பாட்டு கருவியில் பழுது ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் வகை கார் 'ஸ்விப்ட்'. செடான் வகை கார் 'டிசையர்'. 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை டிசையர் மற்றும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்விப்ட் கார்கள் அந்தந்த பிரிவுகளில் அதிகப்படியாக விற்பனையாகும் கார்கள் பட்டியலில் உள்ளன. அதிலும் டிசையர் கார் விற்பனையில் புது சாதனையையே படைத்தது.
இந்த நிலையில், இவ்விரு வகை கார்களில் ஏர்பேக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த மாருதி சுசுகி, 1279 கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
2018ம் ஆண்டு மே 7 முதல் ஜூலை 5 தேதி வரை தயாரிக்கப்பட்ட மாருதி கார்களில் ஏர்பேக் கட்டுப்பாட்டுக் கருவியில் பழுது இருப்பது தெரிய வந்துள்ளது. 566 புதிய ஸ்விப்ட ரக கார்கள் மற்றும் 713 டிசையர் ரக கார்களில் இந்த பிரச்சினை இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே, மொத்தம், 1279 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். இந்த கார்களின் உரிமையாளர்கள் மாருதி ஏஜெண்டுகளிடம் சென்று தங்கள் கார்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கட்டணமின்றி சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாகனங்களில் இந்த பாதிப்ப உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் மாருதி நிறுவன இணையதளத்தில் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. காரின் chassis எண்ணை வெப்சைட்டில் பதிவிட்டு செர்ச் செய்தால், தங்கள் காரில் பிரச்சினையுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
தயாரிப்பு தரப்பில் பிரச்சினைகள் இருந்தால் உலகளாவிய அளவில் கார் நிறுவனங்களே இலவசமாக அதை சரி செய்து தருவது என்பது நடைமுறையாகும்.
ஏற்கனவே டிசையர் கார்களில் டயர் பகுதியில் ஏற்பட்ட சிறு பிரச்சினையை, மாருதி சரி செய்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர்பேக் என்பது பாதுகாப்புடன் தொடர்புள்ளது என்பதால், வாடிக்கையாளர்கள், இதில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
ஏற்கனவே இவ்வாண்டு 52,686 ஸ்விப்ட் மற்றும் பலேனோ ஹேட்ச்பேக் வகை கார்களை பிரேக் பிரச்சினைக்காக திரும்ப பெற்று சரி செய்தது மாருதி என்பது குறிப்பிடத்தக்கது.