சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்.. போக்குவரத்து நெரிசல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏர்செல் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
இதனைக் கண்டித்து பல இடங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடந்து சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் அண்மையில் மனு அளித்தது.
ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏர்செல் சர்வர்கள் செயல்படாததை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்கள் போர்ட் எண் தராததால் கைபேசி எண்ணை பிற சேவை நிறுவனத்துக்கும் மாற்ற முடியவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.