நெட்வொர்க் பிரச்சினை சரியானது.. அறிவித்தது ஏர்செல்!
சென்னை: ஏர்செல் சேவை முடக்கம் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த நாலைந்து நாட்களாக ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கி போயுள்ளது. வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்கு கூட முடியாத அளவுக்கு நெட்வொர்க் முற்றிலும் இல்லாமல் போனது.
கோவை, சென்னை போன்ற இடங்களில் ஏர்செல் அலுவலகங்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒப்பந்தம் செய்து கொண்ட டவர்களில் தங்கள் சிக்னல்களை நிறுத்திவிட்டதுதான் இதற்கு காரணம் என ஏர்செல் விளக்கம் அளித்திருந்தது.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் 2 நாட்கள் முன்பு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தை நடத்தி டவர்களை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 3 நாட்களுக்குள் சேவை சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
டிராய் கண்டிப்பு
இதையடுத்து படிப்படியாக சேவை மீண்டு வருகிறது. டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவக் ஷர்மா டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், முன்னறிவிப்பு இன்றி வாடிக்கையாளர்களின் சேவையை துண்டித்தது சட்ட விரோதம் என கூறியிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஏர்செல் நிறுவனம் சேவையை வழங்க வேண்டும் என எச்சரித்தார்.
நிலைமை சரியானது
இந்த நிலையில், நிலைமை சரியாகிவிட்டதாக இன்று சங்கர நாராயணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேநேரம், முழுமையாக நிலைமை சீரடையவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். நெட்வொர்க் விட்டுவிட்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
என்ன செய்யலாம்
வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து, திரும்பவும் ஆன் செய்தால் தடையற்ற சேவை கிடைக்கும் என்று ஏர்செல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கிடைக்கும் நெட்வொர்க்கை பயன்படுத்தி வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்கள் அலைமோதுகிறார்கள்.