மாலைக்குப் பின் ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு?... தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் எச்சரிக்கை!
ஏர்செல் சேவையானது மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: செல்போன் டவர் நிறுவனம் மீண்டும் பிரச்னையை எழுப்புவதால் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் கோளாறு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் கூறியுள்ளார். எனவே ஏர்செல்லில் மட்டும் ஆன்லைன் பரிவர்த்தணைக்கான வசதிகள் வைத்திருப்போர் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையிலான நிதிப் பிரச்னையில் டவரை நிர்வகிக்கும் நிறுவனம் திடீரென இழுத்து மூடியதால் நாடு முழுவதும் கடந்த வாரத்தில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் ஷோரூம்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செல்போன் டவர் நிறுவனத்துடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்திகடந்த 2 நாட்களாக ஏர்செல் சேவை சீரடைந்து வந்தது. இதனிடையே இன்று மாலையில் இருந்த சிக்னல் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று ஏர்செல் நிறுவன தென்இந்திய செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். டவர் நிறுவனம் மீண்டும் பிரச்னையை எழுப்பி வருவதால் ஏர்செல் நிறுவனம் மூலம் அதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது கைகொடுக்காத பட்சத்தில் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் பணப்பரிமாற்றம், கேஸ்புக்கிங் உள்ளிட்டவற்றிற்கு ஏர்செல் சிம்கார்டுகளை மட்டுமே வைத்துள்ளவர்கள் மாலைக்குள் அதனை செய்து விடும்படியும் சங்கரநாராயணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் ஏர்செல் நிறுவன நிர்வாகியே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.