"லைட்"டாதான் மது அருந்தியிருந்தார் "ஆடி கார்" ஐஸ்வர்யா.. வக்கீல் வாதம்!
சென்னை: ஆடி காரை அதி வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி முனுசாமி என்ற தொழிலாளரின் உயிரைப் பறித்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்த ஐஸ்வர்யா, அதில் தான் மிகக் குறைந்த அளவிலேயே மது அருந்தியதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரணைக்கே ஏற்காமல் தள்ளுபடி செய்து விட்டது உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் முறைப்படி செஷன்ஸ் கோர்ட்டில்தான் ஐஸ்வர்யா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் நேரடியாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனால்தான் விசாரணையே செய்யாமல் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் குறித்துத் தெரிய வந்துள்ளது. அதுகுறித்த ஒரு பார்வை...ஜூலை 1ம் தேதி இரவு என்னுடைய நண்பர்களுடன் சினிமாவிற்குச் சென்றிருந்தேன்.
- படம் பார்த்து விட்டு ஓ.எம்.ஆர் ரோட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, எனது காரில் வந்து கொண்டிருந்தேன்.
- அப்போது சாலையைக் கடக்க முயன்ற முனுசாமி என்பவர் என்னுடைய ஆடி காரில் அடிபட்டுவிட்டதாக சொல்கின்றனர்.
- இந்த விபத்தில் முனுசாமி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
- அங்கிருந்த போலீஸார் என்னைப் பிடித்து விசாரித்துவிட்டு, 2ம் தேதி என்னைக் கைது செய்தனர்.
- என் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது; கவனக்குறைவால் விபத்தை உருவாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
- பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.
- எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இதுதான் ஐஸ்வர்யா தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஐஸ்வர்யாவின் வக்கீல் வாதிடுகையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவில்தான் ஐஸ்வர்யா மது அருந்தியிருந்தார். இது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஊடகங்கள்தான் இதைப் பெரிதாக்குகின்றன என்று வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதி வைத்தியநாதன் ஏற்கவில்லை.
யார் இந்த ஐஸ்வர்யா?
ஆடி கார் ஐஸ்வர்யா என்று இந்த வழக்கு இப்போது மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. இவர் பிரபல வர்த்தக ஆலோசகர் வில்சனின் மகள் ஆவார். சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று இரவு படத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் காரிலேயே தனது நட்புப் பட்டாளத்தோடு மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டுக்குப் போக பயந்து கொண்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.
ஓம்எம்ஆர் சாலையில் அவர் ஆடி காரை படு வேகமாக ஓட்டியபோது நிதானமிழந்து போயுள்ளது கார். அப்போது திருவான்மியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் மீது கார் மோதியதால், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த வழக்கில்தான் ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.