போதையால் நிற்கக் கூட முடியாமல் கார் மீது சாய்ந்திருந்தார் ஐஸ்வர்யா.. முனுசாமி மனைவி
சென்னை: ஆடி காரை அதி வேகமாக ஓட்டி வந்து எனது கணவர் மீது மோதி அவரது மரணத்திற்குக் காரணமான ஐஸ்வர்யா, முகத்தில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெறுமனே ஸாரி மட்டும் சொன்னார் என்று விபத்தில் பலியான முனுசாமியின் மனைவி கோவிந்தம்மாள் குமுறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள பிடிகே நகரிலதான் முனுசாமி குடும்பத்தினர் சோகத்தின் பிடியில் மூழ்கியுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் முனுசாமியின் குடும்பத்தினர் நிலை மிக மோசமாக உள்ளது. அவரது மனைவி கோவிந்தம்மாள், தனது பிள்ளைகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்று தெரியாமல் அழுதபடி உள்ளார்.
ஒரே ஒரு அறை உள்ள வீடுதான் முனுசாமி வசித்து வந்த வீடு. முனுசாமியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை புரட்டிப் போட்டு விட்டது. குடிபோதையில் அதி வேகமாக காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, முனுசாமி மீது மோதி அவரது மரணத்திற்குக் காரணமானதை இன்னும் அவரது குடும்பத்தினர் மறக்கவில்லை. அதை விட விபத்தை ஏற்படுத்திய பின்னர் காரை துரத்திச் சென்று பிடித்தவர்களிடம் முகத்தில் சலனமே இல்லாமல் ஸாரி என்று மட்டும் சொன்னாராம் ஐஸ்வர்யா.
ஸாரி சொன்ன ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவின் காரை தடுத்து நிறுத்திய தகவல் அறிந்து கோவிந்தம்மாள் தனது மகள் திவ்யா மற்றும் கார்த்திக்குடன் சம்பவ இடத்திற்குப் போயுள்ளார். அப்போது குடிபோதையில் நிற்கக் கூட முடியாமல் கார் பானட் மீது சாய்ந்தபடி நின்றிருந்தாராம் ஐஸ்வர்யா. அவரிடமிருந்து ஸாரி என்ற வார்த்தை மட்டுமே வந்ததாக கூறுகிறார் கோவிந்தம்மாள்.
மது அருந்தியது நிரூபணம்
தற்போது ஐஸ்வர்யா மீது ஐபிசி 304 (2) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மது போதையில்தான் வண்டியை ஓட்டி வந்ததை போலீஸார் நிரூபணம் செய்துள்ளனர். ஆனால் அவர் அருந்தியிருந்த அளவில்தான் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது.
நீதி கிடைக்க வேண்டும்
இவர்களுடன் மோதி எனக்கு என்ன ஆகப் போகிறது. என் கணவர் திரும்பி வரப் போகிறாரா என்று வேதனையுடன் புலம்பி வருகிறார் கோவிந்தம்மாள். ஆனால் எப்படியாவது எனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் உறுதிபட சொல்கிறார்.
அக்கம் பக்கத்தினர் கோரிக்கை
இவர்களது மகன் 11வது படிக்கிறான். மகள் 6வது படிக்கிறார். கோவிந்தம்மாள் தனது பிள்ளைகளை வளர்க்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை
அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் தற்போது கோவிந்தம்மாள் குடும்பம் உள்ளதாம். அக்கம் பக்கத்தினர்தான் அவர்களை அரவணைத்து பார்த்துக் கொள்கிறார்களாம்.