ஐஸ்வர்யா வந்திருக்காக.. அமிதாப்பச்சன் வந்திருக்காக… தி.நகரில் "அடேங்கப்பா"!
சென்னை: நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷிவராஜ் குமார், நாகர்ஜூனாவைப் பார்க்க திருவிழா கூட்டமென மக்கள் தியாகராய நகரில் திரண்டதால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது.
ரொம்ப காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரபல நகைக்கடையின் திறப்பு விழா இன்று பகல் 12.05 மணிக்கு தியாகராயநகரில் நடைபெற்றது.
இதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், நடிகைகள் ஐஸ்வர்யாராய், மஞ்சுவாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நட்சத்திர பட்டாளம்
நடிகர்கள் அனைவரும் பட்டுவேட்டி, சட்டையில் பங்கேற்றனர். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சத்திரங்களை காண நகைக்கடை தியாகராய சாலையில் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
குவிந்த போலீசார்
சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைத்து இருந்தனர். நடிகர்கள் காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ரசிகர்கள் ஆரவாரம்
அமிதாப்பச்சனையும், ஐஸ்வர்யாராயையும் பார்த்து கையசைத்து குரல் எழுப்பினார்கள். அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். பின்னர் அவர்கள் நகை கடையை திறந்து வைத்தனர். நகைகடை முன்னால் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
ஒரே மேடையில் உற்சாகம்
மேடையில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நாகார்ஜுனா, பிரபு, மஞ்சுவாரியார், உள்ளிட்டோர் ஏறி நின்று திரண்டிருந்த கூட்டத்தினரை பார்த்து கையசைத்தனர்.
சென்னை பிடிக்கும்
ஐஸ்வர்யா பேசும் போது, ‘‘சென்னை எனக்கு பிடித்த நகரம். இங்கு ரசிகர்களை சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
எங்க வீட்டு மருமகள்
பிரபு பேசும்போது, ‘ஐஸ்வர்யாராய் எங்கள் வீட்டு மருமகள். எனது தந்தை சிவாஜியை, அமிதாப்பச்சன் அண்ணன் என்றுதான் அழைப்பார். எனவேதான் அவர் எங்கள் விட்டு மருமகளாக இருக்கிறார்' என்றார்.
அழகு தேவதைகளாய்
நகைக்கடை திறப்புவிழாவிற்கு வந்திருந்த சந்தன நிற அனார்கலியில் ஐஸ்வர்யா ராயும், சிவப்பு நிற பட்டுப்புடவையில் மஞ்சுவாரியரும் அழகு தேவதைகளாய் ஜொலித்தனர். அவர்களைப் பார்த்து ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியதோடு செல்போனில் படம் பிடித்தனர்.
ஸ்தம்பித்த தி.நகர்
கூட்டம் அலை மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் பார்க், பாண்டி பஜார், போக்ரோடு, தேனாம்பேட்டை சிக்னல் போன்ற பகுதிகள் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது.