தனித்து களம் காணுவோம்... சமக தலைவர் சரத்குமாருக்கு தொண்டர்கள் கடிதம்
சென்னை: தனித்து களம் காணுவோம் ஆணையிடு தலைவா என்று அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் தொண்டர்கள், தங்கள் கட்சித்தலைவர் சரத்குமாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமத்துவமக்கள் கட்சியின் முகநூல் பக்கத்தில் சமக தலைவர் மற்றும் முதல்வரின் பார்வைக்காக என்னும் தலைப்பில் இன்று வெளியாகியுள்ள கடித விபரம்:
சமத்துவமக்கள்கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வை ஆதரிப்பதில் சமக உறுப்பினர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, ஆனால் சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடும் படியான செல்வாக்கை பெற்றுள்ள கட்சி எங்களது கட்சிக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் படி நாங்கள் செயல் பட நினைக்கிறோம்.
சென்ற சட்டமன்ற தேர்தலில் இருந்து அதிமுக உடன் சிறப்பான வலுவான கூட்டணியில் செயல் பட்டு வருகிறோம். மாண்புமிகு முதலவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சி செய்து வருகிறார், அவரை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்க தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களது கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏறக்காதது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
எங்களது கட்சி கடந்த சட்டபேரவை தேர்தலில் அதிமுக கொடுத்த இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலும் வெற்றி கண்டோம்,தொடர்ந்து அதிமுக விற்கு ஆதரவாக கூட்டணியில் செயல் பட்டு வந்தோம்,கட்சியில் உள்ள கடைநிலை தொண்டன் முதல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இடவேண்டும் என்ற எண்ணத்தில் செயல் பட்டு வந்தோம்.
புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த எங்கள் கட்சி தலைவர் அண்ணன் சரத்குமார் அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் எந்த தொகுதியையும் வழங்காமல் இருப்பது மிகுந்த மன வேதனையை கட்சியினருக்கு ஏற்படுத்தி உள்ளது.
எங்களால் தமிழகத்தின் எந்த தொகுதியிலும் வெற்றி பெற கூடிய சக்தி உள்ளது தமிழக முதல்வர் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களுக்கு தொகுதியை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
எங்களின் இதயத்தில் வாழும் அன்பு தலைவர் சரத்குமார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் , "அதிமுக தொகுதிகள் வழங்காத பட்சத்தில் நாம் தனித்து களம் காண வேண்டும்"என்ற எங்கள் எண்ணங்களை தெரிவித்து கொள்கிறோம்.
தலைவா, ஆணை இடு தலைவா, வெற்றியை உங்களுடையதாக்க காத்து இருக்கிறோம் தலைவா, நமக்கான அங்கீகாரத்தை நாமே போராடி பெறுவோம்.வலுவான வெற்றியை பெறுவோம் என்று தொண்டர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.