கருணாநிதி வீட்டில் நடக்கும் சண்டைக்கு எங்கள் சீரியல்கள் பரவாயில்லை: ராதிகா சரத்குமார்
நெல்லை: நமது இலக்கு 2016 ஆண்டாக இருக்கவேண்டும்.நாம் தனித்து நிற்கும் சக்தியாக வளரவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் 2 வது மாநில மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பணத்திற்காக அரசியலில் பேரம் பேசும் விஜயகாந்தை கட்சிகள் ஒதுக்கித்தள்ளவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:
அர்விந்த் கெஜ்ரிவால்
நான் அரசியல் ரீதியாக எதிர்பார்க்கும் விஷயங்கள் நடந்துள்ளன. டெல்லியல் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஒரு 50 நாள்கூட தாங்காது என்று என் மனைவியிடம் கூறினேன். அதே போல 49வது நாளில் ஆட்சியை இழந்துள்ளனர்.
கெஜ்ரிவால், நியாயத்திற்கு புறம்பாக செயல்படுகிறார். மக்கள் நம்பி கொடுத்த பொறுப்பை எப்படி செயல்படுத்த வேண்டும் என தெரியவில்லை.
விஜயகாந்த் பேரம்
தமிழகத்தில் விஜயகாந்த் தற்போது பணத்திற்காக அரசியல் பேரம் பேசிவருகிறார். அவருக்கு பணம் தேவையே இல்லை. அவருடன் இருக்கும் சுதீஷ் மற்றும் விஜயகாந்த் மனைவிக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே பேரம் பேசிவருகிறார்.
பாஸ் ஆக 35% வேண்டும்
அரசியலுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வரவேண்டும். பணத்திற்காக பேரம் பேசும் அவரை அரசியல் கட்சிகள் ஒதுக்கித்தள்ளவேண்டும். அவர் தமது கட்சிக்கு 8.3 சதவீதம் ஓட்டு வங்கி இருப்பதாக கூறிவருகிறார். 35 சதவீதம் இருந்தால்தான் பாஸ் ஆக முடியும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
நாங்க 100% வளருவோம்
சமத்துவ மக்கள் கட்சி வருங்காலத்தில் 50 சதவீதத்தையும் தொடர்ந்து நூறு சதவீதத்தையும் எட்டிப்பிடிக்க முயற்சிப்போம். என்னை ஒரு ஜாதிக்குள் அடக்க பார்க்கிறார்கள். நான் எங்கேயும் ஜாதியை குறிப்பிடுபவன் அல்ல. என் தந்தை என்னை ஜாதி பார்க்காமல், படிக்கும்போது மனித ஜாதி என்றே சான்றிதழ் குறிப்பிட்டு வளர்த்தார்.
ஜாதியை கேட்கலாமா?
அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவரின் மகனை சந்திக்க நேர்ந்தது. என்னிடம் அணு ஆயுத ஒப்பந்தம், நேரடி அந்நிய முதலீடு போன்றவை குறித்து பேசிக்கொண்டிருந்த அவர், என்னிடம் என் ஜாதி என்ன என்று கேட்டார். எரிச்சலடைந்த நான் பதிலுக்கு அவரது ஜாதியை கேட்டேன்.
சிவகங்கையில் போட்டி
பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா, எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள் என கேட்டார். நான் அதற்கு அவரது தந்தையின் தொகுதியான சிவகங்கையில் போட்டியிடுவேன் என்றேன்.
ஜாதி கிடையாது
எனக்கு ஜாதி கிடையாது எங்கு வேண்டுமென்றாலும் போட்டியிடுவேன் நான் தமிழன் என குறிப்பிட்டேன். ஜாதி உணர்வு எல்லோருக்கும் மனதில் உள்ளது. ஆனால் அதனை வெறியாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வெற்றிபெற நாம் பாடுபடவேண்டும் என்றார்.
கச்சத்தீவு பிரச்சனை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 3வது ராக்கெட் ஏவுதளத்தை நிறுவுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அரிசிக்கு சேவை வரி விதிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதால் மத்திய அரசு இருதரப்பு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும்.
நெல்லையை பிரிங்க
நிர்வாக வசதியை மனதில் கொண்டு நெல்லை மாவட்டத்தை 2ஆக பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் .ஆன் லைன் வர்த்தகத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவில் குடும்ப சண்டை
சமத்துவ மக்கள் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் கட்சியின் ஆலோசகர் ராதிகா சரத்குமார் பேசியதாவது: நான் நடிக்கும் தொலைக்காட்சி தொடர்களின் யதார்த்த நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். தி.மு.க. தலைவர் வீட்டிற்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். திங்கள்கிழமை சென்றால் அந்த குடும்பத்தில் ஒரு சண்டை நடக்கும். ஒரு வாரமாக பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும். பின்னர் தி.மு.க.,தலைவர் "இதயம் கனத்தது கண்கள் பனித்தன என்று கூறுவார். வெள்ளிக்கிழமை மீண்டும் தொடரும் என போட்டு முடிப்பார்கள்.
சீரியலே மேல்
மீண்டும் அடுத்த வாரம் திங்கள்கிழமை வேறு சண்டை துவங்கும். தி.மு.க. தலைவரின் வீட்டில் நடக்கும் குடும்ப சண்டையை ஒப்பிடும்போது எங்கள் தொடர்களில் பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றும்.
2016 இலக்கு
தமிழகத்தில் கூட்டணி தர்மத்தை ச.ம.க. தான் கடைப்பிடித்துவருகிறது. இங்கு தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். நமது இலக்கு 2016 ஆண்டாக இருக்க வேண்டும். நாம் தனித்து நிற்கும் சக்தியாக வளர வேண்டும் என்றார் ராதிகா சரத்குமார்.