சரத்குமார் மீண்டும் நடிப்பதா.. ரொம்ப வேதனையா இருக்கு.. கட்சியை விட்டு விலகிய ச.ம.க. நிர்வாகி!
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து ஒருவர் விலகி விட்டார்.
கட்சியை விட்டு விலகிய நபரின் பெயர் பன்னீர் செல்வம். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கட்சியிலிருந்து விலகியது குறித்து பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தை வழிநடத்தும் அரசியல் தலைவராக விஸ்வரூபம் எடுப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் முழுநேர அரசியல்வாதியாக முனைப்போடு செயல்பட வேண்டிய நேரத்தில், மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன். அதுவே, எனது தொழில் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது என்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே சமகவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி ஏற்கனவே இரண்டாக உடைந்து விட்டது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒரு புதிய கட்சி சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பிறந்தது. அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தனர். அதேசமயம், சரத்குமாரையும் கூப்பிட்டு தனது கூட்டணியில் சேர்த்து ஷாக் கொடுத்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பும், அதன் பின்னரும் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பலரும் வெளியேறிப் போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியை விட்டு விலக என்ன காரணம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்களோ என்னவோ.. எப்படியெல்லாம் யோசிச்சு விலகுறாங்க!