சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு இன்று 8வது பிறந்த நாள்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 31-ந் தேதியுடன் ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஏழு ஆண்டு காலமும் சமத்துவ மக்கள் கட்சிக்கு நல்லாதரவும், நல்லாசியும் வழங்கி வரும் தமிழக மக்களுக்கு என் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக என்னோடு தோளோடு தோள் கொடுத்து அயராது உழைத்து வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது பாராட்டுகளையும் 8-ம் ஆண்டு தொடக்க நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எட்டாம் ஆண்டு தொடக்க நாளில் இருந்து, செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதகாலத்திற்கு தமிழகம் எங்கும் மாவட்ட நிர்வாகிகள் கொடியேற்றுதல், கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துதல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தீவிர உறுப்பினர்சேர்க்கை, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல், அன்னதான நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகளுக்கு கலை, விளையாட்டு போட்டிகள், மக்கள்குறை தீர்ப்பு முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இயக்கத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
சமத்துவ மக்கள் கட்சியினர் தமிழக மக்கள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
இரு கட்சிகள் மாறி.. சொந்தக் கட்சி
சரத்குமார் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தார். பின்னர் நாட்டாமை படத்தை ஜெ ஜெ டிவியில் போட்ட விவகாரம் காரணமாக அதிருப்தி அடைந்த திமுகவுக்கு வந்தார். அங்கு ராஜ்யசபா எம்.பி பதவியும அவருக்குக் கிடைத்தது. பிறகு அதிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடைசியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தென்காசி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்.