சபரிமலை ஐய்யப்பன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் காயம்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கிய 30 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி நடைதிறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். சபரிமலை வலிய நடைப்பந்தல், 18 ஆம் படிக்கு கீழ் உள்ள திடல், சன்னிதான பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். திடீரென அவர்கள் கோவிலுக்குள் முண்டியடித்துச் செல்ல முயன்றபோது, நெரிசல் ஏற்பட்டது.
அதில் சிக்கி பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். சுமார் 30 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சபரிமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.