இதுதாண்டா அதிமுக.. எடப்பாடி அணியிலிருந்து தினகரன் அணி்க்கு "பாஸ்" ஆன திருப்பரங்குன்றம் போஸ்!
மதுரை: தினகரன் கொடுத்த கட்சிப் பதவி தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை அருகில் வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் தற்போது தினகரனுக்கு ஆதரவாக பல்டி அடித்திருக்கிறார்.
அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.போஸுக்கு விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் பதவியை வழங்கி அறிவித்தார். ஆனால் இந்தப் பதவி தனக்குத் தேவையில்லை என்று பேட்டி அளித்திருந்தார் போஸ்.
அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ஏற்பாட்டின் பேரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் போஸ். ஆனால் அப்போதே அவர் தட்டுத் தடுமாறி பேசியதைப் பார்த்து பலருக்கும் சந்தேகம். இவர் முழு மனதுடன்தான் பேசுகிறாரா என்று. இப்போது அந்த சந்தேகத்தை போஸே கிளியர் செய்து விட்டார். அதாவது தினகரன் பக்கம் தாவி விட்டார்.
கேட்காமலேயே கொடுத்தது பெரிய விஷயம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் போஸ் இன்று பேசுகையில், எனக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். அதிமுகவில் பதவி வாங்குவது பெரும் கடினம். அதிலும் என்னை கேட்காமல் பதவி கொடுத்திருக்கிறார்கள். கொடுத்திருக்கும் பதவியை காப்பாற்றுவது எனது கடமை.
உடம்பு சரியில்லாமல் அப்படிப் பேசிட்டேன்
எனது உடல் நிலை சற்று சரியில்லாத காரணத்தினால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதால் பதவியை வேண்டாம் என்று சொன்னேன். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரன் கட்சியை விழிநடத்திச் செல்வார். அவர் வழிநடத்தி செல்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறி ஜகா வாங்கியுள்ளார் போஸ்.
2 நாளுக்கு இப்படிப் பேசினாரே
இதே போஸ்தான் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எனக்கு பதவி கொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை, பதவி கொடுக்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, திடீரென தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
முடியாத காரியம்
எனக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் நான் ஒய்வு பெற்று வருகிறேன். நான் எந்த பதவியிலும் போய் செயல்பட முடியாது. என்னால் முடியாத காரியம். எனவே டிடிவி தினகரன் வழங்கிய பதவி தேவையில்லை என்று கூறியிருந்தார். அப்போது ஆர். பி.உதயகுமார் உடன் இருந்தார்.
இப்படி 2 நாட்களிலேயே தினகரன் அணிக்கு போஸ் "பாஸ்" ஆகிப் போனது எடப்பாடி தரப்பை ஷாக்காக்கியுள்ளது.