ஏ.கே.போஸ் வேட்பாளராக ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியிருந்தாரா? வழக்கு முடியும் முன்பே இருவரும் மரணம்
Recommended Video
சென்னை: திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் போட்டியிட ஜெயலலிதா சம்மதித்தாரா என்ற விடை தெரியும் முன்பாக ஜெயலலிதாவும், ஏ.கே.போஸும் மறைந்துவிட்டனர்.
2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே மே 25ம் தேதி சீனிவேலு உடல்நலக்குறைவால் இறந்தார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது கட்சி பொதுச்செயலாளராக இருந்த, ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் அறிவிக்கப்பட்டார். ஏ.கே.போஸ்க்கு கட்சியின் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதில், கைரேகை இடம் பெற்றிருந்தது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஏ.கே.போஸுக்கு வழங்கியது. அவரும் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதுதானா என தெளிவுபடுத்துமாறு திமுக சார்பில் அத் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர், சரவணன் கோரியிருந்தார்.இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஏ.கே.போஸ் மரணமடைந்துவிட்டார். எனவே அந்த வழக்கின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.