குடிக்கவா சொல்கிறீர்கள்.. நான் படிக்கிறேன்! டாஸ்மாக்கிற்கு எதிராக களமாடும் 7 வயது சிறுவன் ஆகாஷ்
குடியை விடு படிக்க விடு போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் மாணவன் ஆகாஷ் காந்திய வழியில் மதுக்கடைகள் முன்பு படிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாணவர்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 7 வயது சிறுவன் ஆகாஷ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் ஊராட்சியில் கடந்த 15ம் தேதி புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை அப்பகுதியை மக்கள் சூறையாடினர். எனினும் அந்த மதுபானக்கடை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் எனும் 7வயது சிறுவன் பள்ளி பையை தோளில் சுமந்தபடி, கையில் 'குடியை விடு படிக்க விடு' பதாகை ஏந்தி மதுக்கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த கேளாம்பாக்கம் போலீசார் சிறுவனை போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் கைவிட மறுத்து சிறுவன் ஆகாஷ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் சிறுவன் திரும்பிச் சென்றார். சிறுவனின் இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கிளாஸை எடுத்தால் விட முடியாது
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் ஆகாஷ், தந்தையரின் குடிப்பாக்கத்தால் குழந்தைகளுக்கு படிக்க முடிவதில்லை என்றும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிளாஸை கையில் எடுத்தவர்களால் அதனை விட முடியாததால் பணம் கேட்டு வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போடுவதுடன் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடிக்கே செலவிட்டு விடுவதாகவும் சிறுவன் கூறினான்.
படிக்கும் போராட்டம்
படூர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் பெண்களே மது அருந்துவதாகவும் சிறுவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, மன நோயாளிகளைப் போல நடந்து கொள்வதாகவும் ஆகாஷ் கூறினார். படூர் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதே ஆசை என்றும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடாமல் காந்திய வழியில் டாஸ்மாக் முன்பு படிக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
மனிதசங்கிலி
ஏப்ரல் 13ம் தேதி 200 மாணவர்களுடன் சேர்ந்து மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த சிறுவன் ஆகாஷ், பீஹாரில் முழு மதுவிலக்கை அமல்படுத்தும் போது தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி அரசால் மட்டும் ஏன் முடியாது என்றும் சிறுவன் கேள்வி எழுப்பினான்.
வலுப்பெறும் எதிர்ப்புகள்
கடந்த சில தினங்களாகவே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுபானக் கடைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபடுவதோடு கடைகளை சூறையாடும் சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், 7 வயது சிறுவனும் டாஸ்மாக்கிற்கு எதிராக அமைதி வழி போராட்டம் அறிவித்துள்ளதால் டாஸ்மாக் எதிர்ப்புக் குரல் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.