டாஸ்மாக் கடையை மூடுங்க... சிறுவன் ஆகாஷ் தலைமையில் படூரில் போராட்டம்
கேளம்பாக்கம் அருகே படூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக சிறுவன் ஆகாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரி 7வது சிறுவன் ஆகாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
படூரில் கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதிகமான கல்லூரி மாணவர்கள் மது அருந்துகின்றனர் என்பது ஆகாஷின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக சிலர் பெண்களிடம் தகராறு செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் குடியிருப்புகள் நிறைந்த காலனி பகுதியையொட்டி அரசு டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது.
டாஸ்மாக் போராட்டம்
கடையை திறப்பதற்கு முன்பே அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடை திறக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி இரவு கிராம மக்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சேதப்படுத்தினர்.
வழக்கு பதிவு
இதனால், அரசு சொத்தை சேதப்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 132 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
சிறுவன் போராட்டம்
இந்நிலையில், மதுவுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் 7 வயது மகன் ஆகாஷ், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி படூர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடையின் முன்பு தனியாக அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
தனி ஆளாக போராட்டம்
'குடியை விடு, படிக்க விடு' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் சிறுவன் தனி ஒருவனாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தார். எனினும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்கிறது.
தொடரும் போராட்டம்
இந்த நிலையில் சிறுவன் ஆகாஷ் தலைமையில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறுகிறது. குடியிருப்புவாசிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரிய ஆகாஷ், அதுவரை தனது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.