இன்று அட்சய திருதியை- நகை கடைகளில் திருவிழா போல அலைமோதிய கூட்டம்
இன்று அட்சய திருதியை நாள் என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை: சித்திரை மாதம் வரும் திருதியை தினம் அட்சய திருதியை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சென்னை மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம்,வேளச்சேரி, குரோம்பேட்டை பகுதிகளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நகைக்கடைகள் இன்று அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டன.
காலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பெண்கள் குழந்தைகளுடன் நகை வாங்க வந்திருந்தனர்.
பெரிய நகைக்கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகைகளை வாங்கிச் செல்ல வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்பத்தூர், ஆவடி, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், திருவான்மியூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது. தாம்பரம், பாடி, போரூர், பகுதிகளிலும் நகைக்கடைகளில் திருவிழா போல கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.