இன்று அட்சய திருதியை... உங்கள் வீட்டில் பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள்!
அட்சய திருதியை நாளில் தானம் செய்தால் செல்வம் பெருகும் உணர்த்தியுள்ளார் ஆதி சங்கரர். ஏழை வீட்டில் தங்க நெல்லிக்கனி பொழியச் செய்த நாள் அட்சய திருதியை நன்னாள்.
சென்னை: ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை பொன் மழையாக பொழியச் செய்த நாள் 'அட்சய திருதியை' நன்னாள் ஆகும். எனவேதான் அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
கேரளா மாநிலம் காலடி என்னும் ஊரில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு பிறந்தவர் ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி யாசகம் (பிச்சை) எடுத்துதான் உணவு உண்ண வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் யாசகத்திற்காக புறப்பட்டார். அவர் யாசித்த வீடு ஒரு ஏழையின் வீடு. அந்த வீட்டின் முன்பு நின்று, 'பவதி பிட்சாந்தேஹி' என்று மும்முறை குரல் கொடுத்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், 'ஐயா! தங்களுக்கு உணவிட இந்த ஏழையின் வீட்டில் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனி மட்டுமே உள்ளது. இந்தாருங்கள்' என்றாள்.
ஆதி சங்கரர்
அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், 'ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி வியந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையை போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியை நினைத்து மனமுருக வேண்டினார்.
தங்க நெல்லிக்கனி
அப்போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பெய்தன. வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் குவிந்தன. சற்று முன்வரை பரம ஏழையாக இருந்த அந்தப் பெண், மிகப்பெரும் செல்வந்தராக மாறினாள். ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் ஏழ்மையை அகற்றிய தினம் 'அட்சய திருதியை' ஆகும். அவர் பாடிய பாடல் 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.
கனகதாரா யாகம்
கேரளாவின் காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன. இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது.
கொடுங்கள் பெருகும்
கொடுக்க கொடுக்க செல்வம் வளரும் அதுபோல நாம் பிறருக்கு தானம் செய்யும் போதுதான் நம்மிடம் உள்ள செல்வம் வளரும் எனவே தானம் செய்யுங்கள் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தில் இருந்து வருவது போல செல்வம் பெருகும்.