அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நல்ல நேரம் எது தெரியுமா?
அட்சய திருதியை தினத்திற்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் இப்போதே நகைகளை முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.
சென்னை: அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என்ற எண்ணம் அனைவரின் மனதில் பதிவாகி விட்டது. அட்சய திருதியை நாளில் குரு ஓரை, சுக்கிர ஓரைகளில் தங்கநகைகளில் வாங்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் ஜோதிடர்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3-வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 28, 29 தினங்களில் கொண்டாடப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளி சுக்கிரனை குறிக்கிறது. எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை தினத்துக்கு உரிய நன்மையைத் தரும்.
அட்சய திருதியை
குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப்பெற்ற தினம் இந்த அட்சயத் திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன் குபேரன் ஆனதும் இந்த நன்னாளில்தான். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். அதுவும் இதே நாளில்தான்.
நல்ல நேரம்
அட்சய திருதியை தினம் இந்த ஆண்டு ஏப்ரல், 28, 29ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 28ஆம் தேதி பகல் 10 மணி முதல் 11மணி வரை குரு ஓரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி முதல் சுக்கிர ஓரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை குரு ஓரை காலமாகும். இதே போல சனிக்கிழமை ஏப்ரல் 29ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பகல் 10 மணி முதல் 11 மணிவரையிலும் தங்கம், வெள்ளி வாங்க நல்ல நேரம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
என்ன வாங்கலாம்
அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.
அன்னதானம்
அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.
மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.
கஷ்டம் விலகும்
அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும். எனவே தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் உப்பு மட்டுமாவது வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.