அட்சய திருதியை நாளில் குறைந்த தங்கம் விலை - நகைக்கடைகளில் திருவிழா கோலம்
சென்னை: தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படும் அட்சய திருதியை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, தியாகராய நகர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, புரசைவாக்கம், உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் காலை 6 மணி முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. அட்சய திருதியை நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நகைக்கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. கடைகள் மா இல்லை, தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில நகைக் கடைகள் முன்பதிவு வசதியுடன், சிறப்பு கவுன்ட்டர்களையும் திறந்திருந்தன. சிறப்பு சலுகைகளையும் அறிவித்திருந்தனர்.
அட்சய திருதியை
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என்ற எண்ணம் பெண்கள் மனதில் பதிவாகி விட்டது. மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
நகை வாங்க ஆர்வம்
பொதுவாக அட்சய திருதியை நாளில், அன்று தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவது பெண்கள்தான் என்றாலும், ஆண்களிலும் இந்த நம்பிக்கை கொண்டவர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதையடுத்து நகை கடைகளும் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி மக்களை நகைகளை வாங்கத் தூண்டி வருகின்றன.
தங்கநகை மோகம்
ஏழை, நடுத்தர மக்களிடையே அட்சய திருதியை மோகம் அதிக அளவில் இருப்பதால் அன்றையை தினம் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கஷ்டம் தீராதா? என்ற ஏக்கத்தில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர். வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க முன்பதிவு திட்டமும் நகை கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. கடைகள் மா இல்லை, தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
உற்சாக வரவேற்பு
ரங்கநாதன் தெருவில் வாடிக்கையாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த நகைக்கடை உரிமையாளர்கள். கடைகளில் தேனீர், ஜுஸ், இனிப்புகள் வழங்கி உபசரித்தனர்.
தங்கம் விலை குறைந்தது
அட்சய திருதியை தினமான இன்று 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 குறைந்து ரூ.2,854க்கும் ஒரு சவரன் ரூ.152 குறைந்து ரூ.22,832 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கார்ட் சொக்கத்தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.3,052க்கு விற்கப்படுகிறது. இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றன.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.44.60காசுகளாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.150 குறைந்து ரூ.41,725க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் உதவி ஆணையர் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 600 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.