போலீசுக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 அல் உம்மா கைதிகள்.. சேலம், வேலூர், கடலூருக்கு மாற்றம்
சென்னை: செல்போனில் பேசியதை கண்டித்த போலீஸ்காரரை தாக்கிய அல் உம்மா கைதிகள் 9 பேர் வேலூர், சேலம், கடலூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
புழல் சிறையில் தண்டனை கைதிகள் 650-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் புழல் ஜெயிலில் உயர்மட்ட பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் செல்போன் மூலம் பேசுவது, சிறைக்காவலர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 5ஆம் தேதி சிறைத்துறை விஜிலன்ஸ் டி.எஸ்.பி. லட்சுமணன் தலைமையில் போலீசார் புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது உமர் பாரூக் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு ஒருவர் செல்போனை பிடுங்க முயன்றார்.
அவரை உமர்பாரூக், ராஜாஉசேன், சாகுல் அமீது ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புழல் போலீசில் விஜிலென்ஸ் டி.ஜி.பி. லட்சுமணன் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே 9 பேரும் சாப்பாடு கொடுக்க செல்லும் சிறைக்காவலர்களை ஆபாசமாக திட்டுவது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை தனித்தனி சிறைக்கு மாற்ற சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி உமர் பாரூக் சேலம் மத்திய சிறைக்கும், ராஜா உசேன் வேலூர் மத்திய சிறைக்கும், சாகுல் அமீது கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
இன்று காலை 7 மணியளவில் அவர்கள் 3 பேரும் தனித்தனி வேன்களில் ஏற்றப்பட்டு ஆயுதப்படை போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வேலூர், கடலூர், சேலம் ஜெயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.