முகவரியை தொலைத்த அழகிரி.. திமுகவிலே காணாமல் போய்விட்டார்: அமைச்சர் உதயகுமார்
முகவரியை அழகிரி தொலைத்துவிட்டார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுகவில் தொலைந்த முகவரியை தேடி கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவில் முகவரி இல்லாமல் உள்ளார். திமுகவில் அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கவே தனது தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
இதே அழகிரிதான், 2011-க்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றார். ஆனால் திமுகவிலேயே அவர் காணாமல் போய்விட்டார். அவர் உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவும் காணாமலேயே போய்விட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மேடைக்கு ஏற்றார்போல் ஆட்டம் ஆடுகிறவர். அதனால்தான் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்ததுடன், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். வருகின்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம்."
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.