நான் தலைவனும் இல்லை.. நல்ல நடிகனும் இல்லை... அழகிரியின் ஜாலி அறிக்கை!
மதுரை: கருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி ஒரு ஜாலியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி மறைந்தவுடன் திமுகவில் எப்படியாவது இணைந்து விடலாம் என மனக்கோட்டை கட்டினார் அழகிரி. ஆனால் திமுகவோ அழகிரியை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. இது கருணாநிதியே எடுத்த முடிவு என்று கூறிவிட்டனர்.
எனினும் விடாமல் அக்கட்சியில் சேருவதற்கு மிரட்டியும், கெஞ்சியும் பார்த்தார் அழகிரி.
பேரணி
மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சவும் இல்லை, கெஞ்சலுக்கு மனம் இறங்கவும் இல்லை. இதையடுத்து அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி அதாவது கருணாநிதியின் 30-ஆவது நாளையொட்டி அமைதி பேரணியை நடத்த முடிவு செய்தார்.
ஒன்றரை லட்சம்
அந்த பேரணியில் கருணாநிதியின் உடன்பிறப்புகள் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நாளில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் அண்ணா, கருணாநிதியின் சமாதிகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வந்துள்ளனர் என்றார்.
பெரும் ஏமாற்றம்
மேலும் இந்த பேரணியை சிறப்பித்த அத்துனை பேருக்கும் நன்றி என்று கூறினார். உதார் விட்ட அழகிரி அன்று ஏதேனும் அறிவிப்பார் என உற்சாகமடைந்த நிலையில் அவர் பம்மிவிட்டு சென்றார். இது பெரும் ஏமாற்றத்தை தந்தது.
நன்றி
இந்நிலையில் இன்று தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தலைவர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே! நான்...
ஒரு தலைவன் அல்ல..
ஒரு மேடை பேச்சாளன் அல்ல
ஒரு நடிகனும் இ்லலை...
தனிமனிதனாகிய
தொண்டனாகிய எம் வேண்டுகோளை ஏற்று என் தந்தை கருணாநிதியின் 30-ஆவது நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசம் கொண்டு அலைகடலாய் வருகை தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தங்கள் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன். நன்றி என்று ஒரு கடிதத்தை அழகிரி எழுதியுள்ளார்.