ஆலந்தூர் இடைத் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி அறிவிப்பு
சென்னை: ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தற்போது ஆம் ஆத்மி கட்சி எழுத்தாளர் ஞாநியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் ஞாநி சங்கரன் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஞாநியின் பெயர் இடம்பெறவில்லை. தென் சென்னை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக ஞாநியை நிறுத்த ஆம் ஆத்மி கட்சியில் சிலர் முட்டுக்கட்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ஞாநியை ஆம் ஆத்மி கட்சி சென்னையில் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாநி கூறியுள்ளதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க, தி.மு.கவுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் வளரவேண்டும். அதற்கான விதையே ஆலந்தூரில் ஊன்றப்படுகிறது. மேற்படி நால்வரின் கூட்டணியை முறியடிக்கும் மக்கள் சக்தியாக ஆம் ஆத்மியை வளர்ப்பீர் ! வளர்ப்போம்! நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்! அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர். அனைவரும் தம் உழைப்பினை நல்கீர் !
இவ்வாறு ஞாநி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.