ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தல்- தேமுதிக வேட்பாளர் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல்!
சென்னை: ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காமராஜின் மனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவியின் சொத்து விவரம் மறைக்கப்பட்டது குறித்து நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில் அதிமுக, தேமுதிக, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று வேட்புமனு பரிசீலனையின் போது தேமுதிக வேட்பாளர் காமராஜின் மனைவி பெயரிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி புகார் எழுப்பினார். இதற்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களையும் ஞாநி காட்டினார்.
இதைத் தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதனால் தேமுதிக வேட்பாளர் மனுவை ஏற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. நாளை தாக்கல் செய்யும் பதிலின் அடிப்படையில்தான் அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என தெரிய வரும்.
என்ன சிக்கல்?
ஆலந்தூர் தேமுதிக வேட்பாளர் காமராஜ் 2011ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் 138வது வார்டில் போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தமது மனைவி வருமான வரி கட்டவில்லை, பான் நம்பர் இல்லை, அவரது பெயரில் சொத்து எதுவும் இல்லை கூறியுள்ளார். ஆனால் தற்போது மனைவி வருமான வரி கட்டுகிறார். பான் எண் இருக்கிறது, 2010ஆம் ஆண்டு சொத்து வாங்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அப்படி 2010 ஆம் ஆண்டு சொத்து வாங்கியிருந்தால் 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது தேர்தலின் ஆணையத்திடம் உண்மை விவரங்களை மறைத்தார் என்பதை அவரே ஒப்புக் கொள்வதாக அமைகிறது. இது தண்டனைக்குரிய குற்றம் என ஞாநி தரப்பு சுட்டிக்காட்டவே தேமுதிக வேட்பாளருக்கு சிக்கல் வந்துவிட்டது