தமிழரை முட்டாள்களாக்கி விட்டார்கள்.. அலங்காநல்லூர், பாலமேட்டில் பெரும் கொந்தளிப்பு- மக்கள் போராட்டம்
மதுரை: ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததன் மூலம் தமிழர்களை முட்டாள்களாக்கி விட்டார்கள் என்று அலங்காநல்லூரில் மக்கள் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர். மேலும் அலங்காநல்லூர், பாலமேட்டில் நூற்றுக்கணக்கான பெண்களுடன் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக ஆவலுடன் தயாராகி வந்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மட்டுமல்லாமல் அனைத்து கிராம மக்களையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலங்காநல்லூர், பாலமேட்டில் பொது மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். வாடி வாசல் முன்பு கூடி சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து ஒருவர் கூறுகையில் இது எங்களது குல தெய்வ வழிபாட்டில் ஒன்றாக பாரம்பரியமாக நடந்து வருவது. ஆனால் இன்று இதை கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். தமிழர்களை முட்டாள்களாக்கி விட்டார்கள் என்றார் கோபமாக.
இன்னொருவர் கூறுகையில் பல ஊர்களிலிருந்து மாடுபிடி வீரர்கள் வந்துள்ளனர். அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதில் தமிழக அரசுதான் தீவிர முயற்சி எடுத்து உதவ வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அவசரத் தீர்மானம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த உதவ வேண்டும் என்று கூறினார். அலங்காநல்லூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேபோல பாலமேடு, அவனியாபுரத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பலர் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான பெண்களும் கருப்பு கொடிகளுடன் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அசாதாரண நிலை நிலவி வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் மக்கள் கூறியுள்ளனர்.