அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஸ்டாலினிடம் தங்க மோதிரம் பரிசு பெற்ற பெண் !
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் வளர்த்த காளைக்காக பரிசுகளை அள்ளினார்.
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்து சீறி பாய்ந்த காளையை வளர்த்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மோதிரம் பரிசு அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் சிறு வயது முதல் தனது வீட்டில் காளைகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சீறிபாய்ந்தது. இதனை அடுத்து மாட்டின் உரிமையாளரான ரேணுகாதேவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக மு.க.ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அப்போது ரேணுகாதேவிக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் ஸ்டாலின். தவிர விழா கமிட்டி சார்பில் அண்டா, பட்டுப்புடவை, சைக்கிள், டிராவல் பேக் என பரிசுப்பொருட்களை மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கைநிறைய அள்ளிச்சென்றனர்.
இந்த போட்டியில் 11 காளைகளை அடக்கிய விமல்ராஜூக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது.