ஒரு காளையும் தர மாட்டோம்.. அலங்காநல்லூர் அதிரடி... ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தவிக்கும் தமிழக அரசு
ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்படுத்தியிருப்பதால் தமிழக அரசு பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
மதுரை: அவசரச் சட்டம் பிறப்பித்த கையோடு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டு மெரீனாவிலும் பிற ஊர்களிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தைக் கலைத்து விட முயற்சிக்கும் மத்திய அரசு மற்றும் அது ஏவியபபடி நடந்து வரும் தமிழக அரசு ஆகியவற்றுக்கு அலங்காநல்லூர் மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். ஒரு காளையும் கிடையாது என்று அவர்கள் கூறி விட்டதால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு கோரி கடந்த 3 வருடமாக அலங்காநல்லூர் மக்கள் போராடி வந்தனர். சட்டப் போராட்டத்துடன் பல்வேறு வகையில் போராடி வந்த அவர்களை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி முறையாக கண்டு கொள்ளவில்லை. காளையை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பாக மத்திய அரசு உரிய அக்கறை காட்டவில்லை. அதை ஒரு சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் இந்த வருடமும் அதேபோல ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது தமிழக இளைஞர்களும், மாணவர்களும் கொந்தளித்து விட்டனர். ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதித்தனர். அலங்காநல்லூரில் குவிந்த இளைஞர் படை அப்படியே பல்வேறு ஊர்களுக்கும் பரவியது., சென்னை மெரீனாவில் அது சுனாமியாக மாறி நின்றதைப் பார்த்து மத்திய அரசு அதிர்ந்தது. தமிழக அரசு தடுமாறிப் போனது.
தலைமை இல்லாமல் தன்னெழுச்சியாக படையெடுத்து வந்த தமிழர் கூட்டத்தைப் பார்த்து ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். ஆனால் இதை அலங்காநல்லூர் மக்கள் நிராகரித்து விட்டனர். எங்களது ஒரே கோரிக்கை மிருகவதை தடைச் சட்டத்தில் காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். அது மட்டுமே ஒரே தீர்வு. அதை செய்தால்தான் ஏற்போம். மற்ற எதையும் ஏற்க மாட்டோம் என்று கூறி விட்டனர். அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறி விட்டனர்.
அலங்காநல்லூர் மக்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மெரீனா மற்றும் பிற ஊர்களில் நடந்து வரும் போராட்டமும் தொடரும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை வந்துள்ளார். பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ளார். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டு நடக்காது என்று கூறி விட்டனர். காளைகளை அனுப்ப முடியாது என்று காளைகளை வளர்ப்போர் சங்கம் அறிவித்து விட்டது. நாங்களும் வர மாட்டோம் என்று மாடு பிடி வீரர்களும் கூறி விட்டனர்.
வாடிவாசலில் எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியாத நிலையையும் அலங்காநல்லூர் மக்கள் ஏற்படுத்தி விட்டனர். இப்படி நாலாபுறமும் கதவு சாத்தப்பட்டு விட்டதால் தமிழக அரசு திகைத்துப் போய் நிற்கிறது. எப்படி ஜல்லிக்கட்டை நடத்துவது என்று அரசுக்கு பெரும் குழப்பமாகியுள்ளது. மத்திய அரசும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியாத நிலையைப் பார்த்து திகைத்து நிற்கிறது.
இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஏற்பாடும் நடக்காத நிலையில், காளைகளும் இல்லாத நிலையில் எப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பது தெரியவில்லை. எங்களுக்கு நிரந்தர சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வரை ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில் ஒப்புக்கு ஏதாவது ஒன்றை நடத்தி விட்டு கதையை முடிக்கலாம் என்று கணக்குப் போட்ட மத்திய மாநில அரசுகளின் கணக்கு பலிக்காத நிலை ஏற்பட்டு விட்டது.