ஏம்மா, கா லிட்டர் கழுதைப் பாலை வாங்கி புள்ளைக்கு காய்ச்சிக் கொடேன்.... !
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரி, கல்லூற்று, கழுநீர்குளம் பகுதிக்கு கழுதைப்பால் விற்பனையாளர்கள் 5 பேர் கழுதைகளுடன் வந்து கழுதைப்பால் வேண்டுமா என வீதிகளில் கூவியவாறு சென்று விற்பனை செய்தனர்.
இதை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று இவ்வாறு கழுதைப்பால் விற்றனர். ஒரு சங்கு ரூபாய் 30, ரூபாய் 40 விலையில் விற்கப்பட்டது.
பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பால் வாங்கி கொடுத்தனர். பொதுமக்கள் கேட்ட உடன் சுடசுட பால் கரந்து விற்பனை செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கு நல்லது:
இது பற்றி கூறிய கழுதைப்பால் விற்பனையாளர்கள், "கழுதைப்பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இப்பாலை குடிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து குழந்தைகள் விடுபடுவர்.
மஞ்சள் காமாலைக்கு தீர்வு:
இந்த கழுதைப்பால் சிறுவர்கள், குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, சளி உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
புல், கொள்ளு உணவு:
கழுதைப்பாலை அனைத்து வயதினரும் குடிக்கின்றனர். ஒரு நாளைக்கு 5 முதல் 7 சங்கு கழுதை பால் கிடைக்கிறது. ஒரு கழுதைக்கு உணவாக புல், கொள்ளு, புண்ணாக்கு தரப்படுகிறது.
நூறு ரூபாய் செலவு:
இவற்றிற்காக தினமும் நூறு ரூபாய் செலவாகிறது. கழுதைப்பால் கறந்தவுடன் ஒரு நிமிடத்திற்குள் குடித்துவிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.
ஸ்பெஷலா ஒன்னும் இல்லை:
டாக்டர்கள் தரப்பில் இது பற்றி கூறும்போது "கழுதைப்பாலில் குறிப்பிடத்தக்க விசேஷ சத்துக்கள் இல்லை. எனினும் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக நம்புகின்றனர்" என்றனர்.
தாராளமா கொடுக்கலாம்:
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறுகையில் "கழுதைப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதில் தவறில்லை.
அந்த காலத்திலேயே உண்டு:
நாங்கள் அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை கொடுப்பதை பார்த்துள்ளோம். குழந்தைகளுக்கு இப்போது வரும் திடீர் காய்ச்சல் மற்றும் நோய்கள் போன்று அந்த காலத்தில் வந்ததில்லை" என்றனர்.