இந்த குடிகார அப்பாவுக்கு இப்படி ஒரு பெண்ணா? .. திகைத்து நின்ற ஆம்பூர் மக்கள்!
மதுஅருந்திவிட்டு விபத்து ஏற்படுத்திய பள்ளி பேருந்து ஓட்டுனரை அவரது மகள் சரமாரியாக தாக்கினார்.
ஆம்பூர்: நம் மாணவர்களை நினைத்தாலே இப்போதெல்லாம் புல்லரித்து விடுகிறது. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் அது அவர்களது பள்ளி முதல்வரே ஆனாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தும், அவர்களை கம்பி எண்ண வைத்துவருவதும் சமீபகாலமாகவே நடந்து வருகிறது. ஆனால் இதற்கு அடுத்த கட்டத்திற்கும் மாணவர்கள் சென்று தங்களது சமூக அக்கறையை நிலைநாட்ட துடிக்கும்போது மனதில் ஏதோ இனம்புரியாத சிலிர்ப்பு வந்துபோகிறது. அப்படித்தான் ஒரு மாணவி செய்துள்ள இந்த காரியமும்.
ஆம்பூர் அருகே வசித்து வருபவர் அன்பு. இவருக்கு வயது 56. வடகரையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுனராக உள்ளார். மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளியில் விட்டு விட்டு, மீண்டும் அழைத்து வருவார். இவருக்கு ஒரு மகள். அவள் ஒரு அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கமாக அன்பு பணிக்கு சென்றார். சும்மா செல்லவில்லை. செம போதையில் சென்றுள்ளார். பஸ்சினில் மாணவர்கள் முழுவதுமாக நிறைந்திருந்தனர். பஸ்ஸை ஓட்ட தொடங்கினார்.
ஆட்டம் கண்ட பஸ்
தொடங்கியது முதலே பஸ் ஆட்டம் காண தொடங்கியது. கோணல் மாணலாக ஓடிய பஸ் ஓடியதால், மாணவர்களோ அதிர்ச்சியடைந்ததுடன் பயத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர். சில பிள்ளைகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய தொடங்கியது. தாறுமாறாக சாலையில் பஸ் செல்வதை கண்ட மாணவ பிஞ்சுகள் அலறின. திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ், மின்னூர் பால் சொசைட்டிக்கு அருகே இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது டமார் என மோதி நின்றது.
சிறைபிடித்த ஊர்மக்கள்
இதில் பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஏற்கனவே அழுதுகொண்டிருந்த மாணவர்கள், காயத்தில் இன்னும் சத்தமாக அழ தொடங்கினர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ஒன்றுதிரண்டு வந்து டிரைவரை சிறைபிடித்தனர். அந்தநேரம் பார்த்து டிரைவரின் மகள் அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். வழியில் கூட்டமாக இருக்கவும், என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தார். அங்கே தனது தந்தையை ஊர் மக்கள் சிறைபிடித்து இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்து என்ன ஆச்சு என்று கேட்டார்.
ஏன் என் மானத்தை வாங்குறீங்க?
அதற்கு அங்கிருந்தவர்களும் நடந்ததை சொன்னார்கள். இதனால் ஆத்திரமடைந்த மகள், தன் அப்பாவிடம் சென்று, "ஏன் இப்படி செஞ்சீங்க? எதுக்கு காலைலயே தண்ணி அடிச்சிட்டு வண்டிய ஓட்டுறீங்க? என் மானத்தை ஏன் இப்படி வாங்கறீங்க" என்று அடுக்கடுக்காக கேட்டார். பின்னர் அங்கு அடிபட்ட மாணவர்களை கண்டதும் இன்னும் கோபம் அதிகமாக அந்த மகள், பெற்ற அப்பா என்றும் பாராமல் சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டார். சிறைபிடித்த அனைவரும் மகள் வெளுத்து வாங்குவதை கண்டு திகைத்து நின்றனர்.
உறைக்கவே உறைக்காது
இந்த விபத்தினால் பிள்ளைகள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பாழும் குடியால் இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் தமிழகம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. இந்த குடிகார அப்பாவுக்கு இப்படி ஒரு பெண்ணா? அப்போதும் இதுபோன்று குடிகார அப்பாக்களுக்கு இதெல்லாம் உறைக்கவே உறைக்காது!