தமிழகத்தில் பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு : அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே தமிழக அரசின் கொள்கை என்று இன்று நடந்த எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தனர்.
அப்போது, பேசிய அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு. உடனடியாக ஒரே நேரத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதாலேயே படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் மின் தடை குறித்த தொலைபேசி அழைப்புப் புகார்கள் 90% நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன. நிதி நெருக்கடி இருப்பினும், இலவச மின்சேவை திட்டம் தொடர்ந்து வருகிறது.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊழியர்களுக்கு 600 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 2018ல் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.