அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ. அண்ணாதுரைக்கு இறப்பு சான்றிதழ்: மதுரை மாநகராட்சி மீது புகார்
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு 26-7-2007 அன்று இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23ம் தேதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மதுரை தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. அண்ணாதுரை 2006ம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்கள் இருவருமே உயிருடன் உள்ளனர்.
இறப்பு சான்றிதழ்கள் அவர்களின் முகவரிக்கு வந்துள்ளது. அதில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சான்றிதழ் போன்று அரசு சீல் வைக்கப்பட்டு மாநகராட்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்து இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். உயிருடன் இருக்கும் தனக்கு இறப்பு சான்றிதழ் அனுப்பிய மதுரை மாநகராட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் தன்னைப் போலவே அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் இறப்பு சான்றிதழ் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அறிந்த மதுரை மாநகராட்சி மேயர் அதிர்ச்சி அடைந்தார். இறப்பு சான்றிதழ் விவகாரம் குறித்து அவர் மாநகராட்சி கமிஷனர் நந்தகோபாலிடம் கேட்டார். அவரோ, தான் விடுப்பில் சென்ற வேளையில் தனது பொறுப்பில் இருந்தவர்களிடம் ஏமாற்றி யாரோ இந்த சான்றிதழ்களை வாங்கியதாகக் கூறினார்.
இது குறித்து மதுரை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.