அப்ப இருந்த நான் இப்ப இல்லை.. அல்ஜசீராவின் ஆவணப் படத்தில் மனம் திறந்த கவுசல்யா
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலையை அல்ஜசீரா என்ற துபாய் செய்தி நிறுவனம் ஆவணப்படமாக எடுத்துள்ளது.
உடுமலைப்பேட்டை: ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்ட சங்கரை, கவுசல்யாவின் தந்தை கூலியாட்கள் மூலம் படுகொலை செய்த கொடூர சம்பவம் குறித்து அல்ஜசீரா சானல் ஒரு ஆவணப் படம் எடுத்துள்ளது.
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த 2016 மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.
தூக்கு தண்டனை
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளார். தமிழகத்தையே புரட்டி போட்ட இந்த சம்பவத்தை அல்ஜசீரா என்ற கத்தார் செய்தி நிறுவனம் India's Forbidden Love என்ற ஆவணப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை சாதனா சுப்ரமணியன் என்பவர் எடுத்திருக்கிறார். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட பலருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிற அந்த கடைசி நிமிடம் வரை மிக இயல்பாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறார்
தீர்ப்புக்கு 6 மாதங்களுக்கு முன்னர் இதுகுறித்து கவுசல்யா கூறுகையில் நானும் சங்கரும் துணி எடுத்துகொண்டு நடந்து சென்று கொண்டிருந்தோம். பின்னாடியே 4 அல்லது 5 பேர் கூட்டமாக வந்தனர். அப்போது சங்கரை இழுத்து தாக்கிய அந்த நபர்கள் உனக்கு காதல் கேட்குதாடா என்று கெட்ட வார்த்தைகளால் அவர்கள் திட்டி தாக்கி வெட்டினர். இதற்கு முன்னரே என்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, மாமா ஆகியோர் என்னை வீட்டுக்கு வந்துவிடுமாறு அழைத்தனர். அப்போது நான் வரவில்லை என்றதும், சங்கரை யாராவது எதாவது செய்துவிட்டார்கள் என்றால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விட்டு சென்றார்கள்.
கல்லூரி பேருந்தில் சந்தித்தோம்
சங்கர் என்னுடைய ஜாதியாக இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் நடந்திருக்காது. எங்கள் குடும்பம் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். நானும் சங்கரும் முதல்முறையாக சந்தித்தது கல்லூரி பேருந்தில்தான். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். இவர் போய் காதலிக்கிறாரா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அமைதியாக இருப்பார். என் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருப்பார்.
புனிதம் கெட்டுவிடுமாம்
என் மீது மிகவும் பாசமாக இருப்பார். அவர் என் மீது காட்டிய பாசம் இதுவரை நான் யாரிடமும் பார்த்ததில்லை. நான் அவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் ஜாதியின் புனிதம் கெட்டுவிடும் என என் குடும்பத்தினர் கருதினர். ஆனால் பழையதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதுபோல் என்னை போன்று ஒரு கவுசல்யாவோ அல்லது சங்கரோ வந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் தோன்றும். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன் என்றார்.
வீட்டை சுத்தப்படுத்துவேன்
இதுகுறித்து கவுசல்யாவின் சகோதரர் கூறுகையில், அம்மா இல்லாததால் நான் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளேன். நான் அம்மா, அப்பா அவர்கள்தான் என் உறவு. எனது உறவுக்காரர்கள் என்னை பார்த்து கவுசல்யா ஒருத்தனை கூட்டிட்டு போய்டா நீ ஏன் சும்மா இருக்கே னு கேட்பாங்க. மறுபடியும் அவளை சேர்த்து கொள்ள மாட்டோம் என்றார். கவுசல்யா எங்கள் குடும்பத்தை பற்றி மேடை ஏறி பேசி வருகிறார். எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் செத்துவிடுவோம் என்று கவுசல்யாவின் பாட்டி கூறுகிறார்.
தாய் என்று வேண்டாம்
தீர்ப்பின் போது கவுசல்யாவின் வீட்டை சுற்றி நிறைய செய்தியாளர்கள் இருந்தனர். அப்போது கவுசல்யாவும் தீர்ப்பை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தாய் விடுதலை என்று தொலைகாட்சி சேனல் ஒளிபரப்பியது. இதற்கு சம்பந்தப்பட்ட சேனல் நிருபரை அழைத்து, எனது தாய் என்று தயவுசெய்து போடாதீர்கள், அன்னலட்சுமினு போட சொல்லுங்க என்றார் கவுசல்யா.