புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம்
இந்தத் தீர்ப்புக்கு துவண்டுவிடமாட்டோம்; நாங்கள் அனைவரும் போராளிகள் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கின் இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பால், நாங்கள் துவண்டுவிடமாட்டோம்; நாங்கள் அனைவரும் போராளிகள் என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதுகுறித்து ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் பேசுகையில், 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம்.
இதை எதிர்த்துப் போராடுவோம். காரணம் நாங்கள் அனைவரும் போராளிகள். 18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் எனக்கு இரு கண்கள். கென்னடி என் சகோதரர். டாக்டர் முத்தையா எனது அண்ணன். எனவே, யாரையும் குறை சொல்ல வேண்டாம்.
நானே போக சொன்னாலும் யாரும் என்னை விட்டு போகமாட்டார்கள். நாங்கள் எந்த சோதனை வந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். கட்சியை மீட்பதற்காக 18 எம் எல் ஏ.,க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி அரசுக்கான ஆயுள் 3 அல்லது 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அதுகுறித்து தீர்ப்பையும், சட்டத்தையும் படித்துவிட்டுதான் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார்.