ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்.. அதிமுக எம்.பிக்களும் சென்னையில் முகாம்
அதிமுக எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அதிமுக எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்த 37 அதிமுக எம்பிக்களும் அவசரமாக சென்னை திரும்பினர்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் சென்னை அப்போலோவுக்கு விரைந்தனர்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்த 37 அதிமுக எம்பிக்களும் அவசரமாக சென்னை திரும்பினர். இதனால் மக்களவையில் அதிமுகவினர் வரிசை வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரையும் திங்கட்கிழமை அவைக்கு செல்லவில்லை.