அதிமுக ஆட்சியின் அனைத்து நாட்களும் கருப்பு நாட்கள்தானே.. கருணாநிதி பாய்ச்சல்
சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11ஆம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள் செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கேள்வி பதில் வடிவில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.....
இதோ ஜெயலலிதா விடுதலை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச் சர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். இடையில் இந்த ஏழரை மாதங்கள் மொத்தத் தமிழ்நாடும் நிர்வாகக் குளறுபடிகளால் ஸ்தம்பித்தது.
ஓர் அரசாங்கம் என்பது அன்றாட அலுவல்களைக் கவனிக்கும் நிர்வாக அமைப்பு மட்டுமா என்ன? மக்கள் நலனையும், மாநில வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதும், சட்டங்களை அமல்படுத்துவதும்தான் ஒரு முழுமையான அரசின் செயல்பாடுகள். இந்த ஏழரை மாதங்களில் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.
முடங்கிய திட்டங்கள்
மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதி நிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறுகின்றன.
கோவில் கோவிலாக ஏறும் அமைச்சர்கள்
இவற்றைக் கவனித்து சரி செய்ய வேண்டிய அமைச்சர்களோ, கோயில், கோயிலாகச் சென்று தீ மிதிப்பதும், காவடி எடுப்பதுமாகவே பொழுதைக் கழித்தனர். எதைக் கேட்டாலும் "அம்மா வரட்டும், அம்மா வந்தால்தான்" என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட்டது.
ஜெயலலிதாவே பொறுப்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு சொல்லப் பட்டதற்கும், இப்போது மே 11ஆம் தேதி விடுவிக்கப் பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள் செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள். இதோ ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விட்டார். இதுவரை அவர் பெயரால் நிகழ்த்தப்பட்ட அலட்சியங்களுக்கும், அத்துமீறல் களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
இனியேனும் அரசு எந்திரம் செயல்படட்டும்!!!
"அமைதி, வளர்ச்சி, வளம்" என நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் முன் வைத்த முழக்கத்தை அவரே ஒரு முறை நினைவூட்டிக் கொள்ளட்டும். அரசு இயந்திரம் இனியேனும் முறையாக, முழுமையாக, இதயசுத்தியுடன் செயல்படட்டும். ஏனெனில் தீர்ப்புத் தேதிகள் இன்னும் மீதம் இருக்கின்றன" என்று ஒரு ஏடு எழுதியுள்ளது.
எந்த நற்பெயரை ஈட்டியது அ.தி.மு.க.?
இன்னொரு இதழின் கேள்வி பதிலில், ஒன்று இதோ! "நான்கு ஆண்டுகளில் ஈட்டிய பெயரை நடப்பு ஆண்டில் கெடுத்து வருகிறதே அ.தி.மு.க.?" என்ற கேள்விக்கு, "எந்த நற்பெயரை நான்கு ஆண்டுகளில் ஈட்டினார்கள்?" என்று அந்த இதழ் பதில் அளித்திருக்கிறது.
கமிஷன் அடிப்படையில் பணிகள்
தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவரே, யார் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பதை ஏடு களுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறாரே; பொதுப்பணித் துறை அமைச்சருக்கு 5 சதவிகிதம் - மற்ற துறையில் பணிகள் நடந்தால் அந்தத் துறை அமைச்சருக்கு 5 சதவிகிதம் - கண்காணிப்புப் பொறியாளருக்கு 2 சதவிகிதம் - செயற்பொறியாளருக்கு 7 சதவிகிதம் .. உதவிச் செயற்பொறியாளருக்கு 7 சதவிகிதம் - உதவிப் பொறியாளருக்கு 7 சதவிகிதம் - பணி ஆய்வாளருக்கு (ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர்) 3 சதவிகிதம் - அலுவலக ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் - வருமான வரித் துறை, சேல்ஸ் டாக்ஸ் ஆகியவற்றுக்கு தலா 2 சதவிகிதம் என மொத்தம் 45 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் என்று விளக்கி ஏடுகளில் அந்தச் செய்தியும் வந்துள்ளது.
அரசு மறுக்கவில்லையே!
அந்தச் செய்தி தவறாக இருந்திருந்தால், அரசு சார்பில் அப்போதே மறுத்திருப்பார்கள்; ஆனால் இன்றளவும் மறுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் மேலும் கூறும்போது, "இந்தத் துறையிலே உள்ள பெரும்பாலான பொறியாளர்கள் மந்திரிக்குக் காசு கொடுக்க வேண்டுமென்று சொல்லியே லஞ்சம் கேட்கிறார்கள். இந்த அளவுக்கு ஊழல் பெருகியுள்ளது. இந்தத் துறையின் அமைச்சரும், முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்தையும் சந்திக்க பல முறை முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களைச் சந்திக்கவில்லை. லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக எங்களைக் கைது செய்தாலும் பரவாயில்லை; லஞ்சம் வாங்கியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டால் போதும்" என்று கூறியிருக்கிறார். மற்றொரு ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, "ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கிரானைட் பணியைச் செய்தேன். அந்தப் பணி முடித்து பில் பாஸ் செய்ய மந்திரிக்கு காசு கொடுக்க வேண்டுமென்று அங்குள்ள உதவிச் செயற்பொறியாளர் ஸ்ரீதர் என்னிடம் லஞ்சம் கேட்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.
சுருட்டப்பட்ட லட்சங்கள்
நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்களில் பராமரிப்புப் பணி என்று சொல்லி பல இலட்சங்களை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் சுருட்டியிருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பராமரிப்புப் பணி அமைச்சரின் பினாமி ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்படும். சில டெண்டரை பேரம் பேசி தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்குக் கொடுக்கிறார்கள். கடந்த 5ஆம் தேதி நடந்த டெண்டரில் வி.ஐ.பி. தரப்பினருக்கு 24 சதவிகிதம் கொடுத்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை வெளி மாவட்ட ஒப்பந்ததாரர்கள் பெற்று இருக்கிறார்கள்" என்றெல்லாம் விளக்கியிருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகும் ஆலோசகர் என்ற பதவியில் இரண்டு ஆண்டுக் காலமாக இருந்த பொறியாளர் ஒருவர், மேலிடத்துக்குப் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் கில்லாடி. முதன்மைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், வி.ஐ.பி.க்கு நெருக்கமானவர் என்பதால் அந்தப் பதவியில் நீட்டிப்புப் பெற்று பல கோடிகளைச் சம்பாதித்து உள்ளாராம் என்று ஒரு இதழ் தெரிவித்துள்ளது. இந்தச் செய்திகள் உண்மை யில்லை என்றால் அரசுத் தரப்பில் இதுவரை ஏன் மறுக்கவில்லை?
மோசமாகும் சட்டம் ஒழுங்கு
ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் என்று எடுத்துக் கொண்டால் - சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 80 பவுன் நகைகள் கொள்ளை - வண்ணாரப்பேட்டை நகைக்கடையில் பத்து பவுன் நகை கொள்ளை - கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் அதிபர் வீட்டில் 63 பவுன் நகையும், 18 லட்சம் ரூபாயும் கொள்ளை ... சென்னை மெரினா கடலில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவி பலி - அடையாறில் ரோந்து போலீசார் மீது தாக்குதல் - பம்மல் சங்கர் நகரில் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - சென்னையில் நிதி நிறுவன அதிகாரி காரில் கடத்தப்பட்ட நிகழ்வு - வியாசர்பாடியில் லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி ... பட்டாபிராமில் மூன்று பேர் கஞ்சா விற்பனை - திருவள்ளூர் மாவட்டத்தில் முதியவர் ஆறுமுகம் அடித்துக் கொலை - கரூர் அருகே அடகுக் கடைக்குள் புகுந்து 200 பவுன் நகை கொள்ளை என்று கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த அடிப்படைப் பணிகளை எல்லாம் கவனிக்க வேண்டிய காவல் துறைக்கு வேறு எத்தனையோ கடமைகள்; பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?
எத்தனை முறை கண்டனம் தெரிவிப்பது?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எத்தனை முறைதான் கண்டனம் தெரிவிப்பது? ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போலத்தான் காங்கிரஸ் ஆட்சி ஆனாலும், பா.ஜ.க. ஆட்சி ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து கொண்டே போகிறது. கேட்டால், மத்திய அரசிலே உள்ளவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை என்று கூறி தப்பித்துக் கொள்கிறார்கள்.
சசிகலா, தினகரன் விடுதலை குறித்து…
1991- 1996ஆம் ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, ஜே.ஜே. தொலைக் காட்சி நிறுவனத்திற்கு சாட்டிலைட் இணைப்புப் பெறுவதற்காக, வெளிநாட்டு நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்ததாக, மத்திய அமலாக்கத் துறை 1996ஆம் ஆண்டில் ஜே.ஜே. டி.வி., சசிகலா, தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான சசிகலா, தினகரன் ஆகியோர் "காபிபோசா" தடுப்புக் காவலில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தனர். 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி சசிகலா, தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவினை ஏற்று, மாஜிஸ்திரேட் தெட்சணா மூர்த்தி அவர்கள் சசிகலா மற்றும் தினகரன் மீது தனியாகப் போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் மூன்று வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறார். அவற்றின் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.