தூத்துக்குடி- அமெரிக்க கப்பலில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்-35 பேர் கைது
தூத்துக்குடி: இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக தூத்துக்குடியில் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உட்பட 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 11ந் தேதி அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலை கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். கப்பல் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட ஆயுதங்கள் தாங்கிய கப்பல் அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் இதில் 26வகையான நவீனரக ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு மாவட்ட காவல்துறையிடம் இருந்து கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கப்பலில் உள்ள மாலுமிகள், பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கப்பலின் லாக் புக்கை விசாரணையின்போது தரமறுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் க்யூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை 1மணியளவில் கப்பலில் இருந்து 35 துப்பாக்கிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட தோட்டக்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8மணியளவில் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் கப்பலின் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர்கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கப்பல் பாதுகாவலர்கள், மாலுமிகள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 35பேரும் கைது செய்யப்பட்டாலும் 33 பேர் மட்டுமே காவல்நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இருவர் கப்பலின் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.