மாணவர்கள் முற்றுகை, கோச்சடையான்.. மோடி பதவியேற்பு விழாவை ரஜினி தவிர்த்த காரணங்கள்!
சென்னை: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதால் அதில் ரஜினிகாந்த் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்தே மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகத்தினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், தமிழீழ மாணவர் கூட்டமைப்பு உள்பட ஏராளமான இயக்கங்கள் சார்பில் தொடர்ந்து கண்டன போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.
ராஜபக்சே கலந்துகொள்ளும் மோடி விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை முன்வைத்து, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டினை முற்றுகையிடப் போவதாக பாலச்சந்தர் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டபடியும், ரஜினி வீட்டினை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முற்றுகைப் போராட்டத்தின் எதிரொலியாகவே ரஜினிகாந்த் மோடியில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோச்சடையான் படம் ரிலீஸாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் முதல் சில நாட்களை தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தமிழகத்தில் எதிர்ப்பை சம்பாதிக்க ரஜினி விரும்பவில்லை என்கிறார்கள்.