மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த பந்த்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை
சென்னை: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் 1998ஐ முழுமையாக மாற்றி சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல பாதிப்புகள் உள்ளது என்று கூறி பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து புதிய சட்டத்தை எதிர்த்து நேற்று நாடு தழுவிய அளவில் பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் ஆகியவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
தமிழகத்தில்
தமிழகத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. பேரவை உள்பட 12 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பல்வேறு இடங்களில் ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை
சென்னையில் சில இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
மாநிலத்தின் சில பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின்ர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லாரிகள்
தமிழகத்தில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்பட்டன. புதிய சட்டம், சுங்கவரி கட்டணம் ஆகியவை குறித்து வரும் 12ம் தேதி மத்திய அமைச்சர் கட்காரியை சந்தித்து பேச உள்ளதால் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
கேரளா
வேலை நிறுத்தத்தால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் அரசு பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் தனியார் பேருந்துகள் ஓடின. கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெங்களூரில் ஓடிய அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.