பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிடும் போராட்டம்? விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு இன்று முடிவு!
பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை: டெல்லியில் இன்று அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாமா என விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்யவுள்ளது.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்மையில் 40 நாட்களுக்கும் மேலாக அய்யயாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று நடைபெறுகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் உள்பட 28 மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் 300 பேர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க அய்யாக்கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இதில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் தொடர் அறவழிப் போராட்டத்தை நடத்தலாமா அல்லது 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாமா விவசாயிகள் முடிவு செய்யவுள்ளனர்.