அமைச்சர்கள் முற்றுகை… 50 வாக்காளர்களுக்கு 5 பேர்... அதிமுகவின் அதிரடியால் அனல்பறக்கும் ஆர்.கே.நகர்!
அனைவரின் பார்வையும் ஆர்.கே நகரை நோக்கி என்பதைப்போல அனைத்து அமைச்சர்களும் ஆர்.கே.நகரில் முகாமிட்டிருக்கின்றனர். காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடியைப் பற்றிய கவலையில்லை... அம்மாவை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து கின்னஸ் சாதனை படைக்கவேண்டும் என்ற லட்சிய! நோக்கோடு ஆர்.கே.நகரில் வலம் வருகின்றனர் அமைச்சர் பெருமக்கள். இதனால் தமிழக அரசு இயந்திரமே முடங்கி போயுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எதிர்கட்சிகள்.
ஆர்.கே.நகரில் வரும் 27ம்தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இன்னும் 10 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மழை பெய்து குளுமையான சூழ்நிலை நிலவினாலும் அதிமுகவினரின் முற்றுகையால் தொகுதியில் சூட்டை கிளப்பியுள்ளது பிரச்சாரம். வாக்காளர்களைக் கவர விதம் விதமாய் அவர்கள் கையாளும் டெக்னிக்குகள் அடேங்கப்பா சொல்ல வைக்கிறது... இடைத்தேர்தலில் சுவாரஸ்யமான பிரச்சாரத்தைக் காண ஓவர் டூ ஆர்.கே.நகர்...
வீதி எங்கும் இரட்டை இலை
ஆர்.கே.நகரின் முக்கிய சாலைகள் எங்கும் இரட்டை இலை சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. வீடுகளில் கோலம் கூட இரட்டை இலை கோலம்தான் போடுகின்றனர் மகளிர் அணியினர்.
அதிமுக கரைவேட்டிமயம்
ஆர்.கே.நகரின் அதிமுக வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதா என்பதால் என்பதால் அவருக்கு ஆதரவாக 28 அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு தொகுதியில் முற்றுகையிட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் இருந்தும் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
ஒரு இடம் பாக்கியில்லை
ஆர்.கே.நகரில் மொத்தம் 230 வாக்குச் சாவடிகள் உள்ளன. 3 வாக்குச் சாவடிக்கு ஒரு அலுவலகம் அமைத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்வதால் தொகுதிவாசிகள் விழிப்பதே அதிமுக கரைவேட்டி கட்டியவர் முகமாகத்தான் இருக்கிறது. அதிமுகவினர். தேர்தல் குழுவினர் தவிர 48 எம்.பி.க்கள், 150 எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் என சுமார் 10,000க்கும் அதிகமான அதிமுகவினர் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர்.
50 பேருக்கு 5 பேர்
50 வாக்காளர்களுக்கு 5 பேர் கொண்ட குழு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 50 வாக்காளர்களின் பெயர்களையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு அவர்களை பின்தொடர்வதுதான் இவர்களின் வேலை.
தனித்தனியே இருக்கணும்
கட்சி சார்பில்லாத நடுநிலை வாக்காளர்களை தனியாகவும், வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களின் பெயர், தொடர்பு விவரங்களை தனியாகவும் குறித்து வைத்துள்ளனர். வாக்காளரின் பெயர், செல்பேசி எண், இ-மெயில் முகவரி, அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? கடந்த முறை யாருக்கு வாக்களித்தார்? என அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளனர். தனித்தனியாக கவனிக்க வசதியாக இருக்குமாம்.
அமைச்சர் செந்தில்பாலாஜி
புதுவண்ணாரப்பேட்டை 39வது வார்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி தண்டையார்பேட்டை ரோட்டில் தேர்தல் பணிமனையை திறந்தது முதல் இதுவரை ஒவ்வொரு வாக்காளரையும் மூன்றுமுறை சந்தித்து விட்டாராம்.
ஆரத்தி எடுங்க
போகுமிடமெங்கும் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கின்றனர். அவர்களை தனியாக கவனிப்பதற்கு என்று ஒரு டீம் போடப்பட்டுள்ளது. ஆரத்தி பெண்களுக்கு கையோடு செட்டில் செய்யப்படுவதால் வழியெங்கும் அமைச்சரை ஆரத்தி எடுக்க அலைமோதுகிறது கூட்டம்.
வியாபாரம் தூள்
ஆர்.கே.நகரில் எங்கு பார்த்தாலும் வெளியூர் வாகனங்களும், வெளியூர் நபர்களும்தான் தென்படுகின்றனர். சுமாராக வியாபாரம் நடந்த கடைகளில் கூட இப்போது சூப்பராக வியாபாரம் நடக்கிறது. ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அசால்டாக புழங்குகின்றன. அப்படியும் வியாபாரம் நடக்காத கடைகளை அதிமுகவினர் வாடகைக்கு பிடித்துக்கொள்கின்றனராம்.
ஹெல்மெட் கூடவா?
இது ஒருபுறம் இருக்க ஹெல்மெட்டில் கூட ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு அதிமுகவினர் வாக்கு சேகரிக்கின்றனர். தலைக்குக் கவசம் ஹெல்மெட், இந்தியாவிற்குக் கவசம் அம்மா என்ற வாசகம்தான் ஹைலைட்.
டிராபிக் ராமசாமி
அதிமுகவினரின் முற்றுகைக்கு இடையே சுயேச்சையாக போட்டியிடும் டிராஃபிக் ராமசாமியும் தொகுதியை வலம் வருகிறார். எம்.ஜி.ஆர் வேடம் போட்டு அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தொகுதிவாசிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் அவர், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி பிரச்சாரம் செய்கிறார்.
சி.மகேந்திரன் பிரச்சாரம்
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நேற்று காலையில் தண்டையார்பேட்டை, மாலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மீனவர்கள் வசிக்கும் பகுதிகள், துணி தேய்க்கும் கடைகள், பூக்கடைகள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் என ஒருவர் பாக்கியில்லாமல் நேரடியாக போய் பிரச்சாரம் செய்கிறார் மகேந்திரன்.
மற்ற வேட்பாளர்கள் எங்கே?
28 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதா, மகேந்திரன், டிராஃபிக் ராமசாமி ஆகிய 3 பேரைத் தவிர மற்றவர்கள் யாரும் பிரச்சாரம் செய்வதற்கான அறிகுறியே இல்லை. வேட்புமனு தாக்கல் செய்தததோடு நமது கடமை முடிந்து விட்டது என்று நினைத்தார்களோ என்னவோ தொகுதிப்பக்கம் பிற வேட்பாளர்களை காண முடியவில்லை. ஒருவேளை தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறதே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? எப்படியோ ஆர்.கே.நகர்வாசிகளுக்கு இந்த திடீர் இடைத்தேர்தல் திருவிழா புது அனுபவமாகத்தான் இருக்கிறது.