திராவிடம் குறித்து பேசுகிறவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம்- கருணாநிதி
சென்னை: திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சனிக்கிழமை மாலை, ரோமாபுரிப் பாண்டியன் தொலைக்காட்சித் தொடர் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம்.
உண்மையிலேயே இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்பவர்கள், தந்தை பெரியார் காலத்திலே இருந்து இதுவரை இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கின்ற நாங்கள், ஏன் இந்த இயக்கத்திலே பீடு நடைபோடுகிறோம் என்று கூறினார்.
பெருமித நடைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்பதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த நடை தொடர, இந்த எண்ணங்கள் மலர, இந்த இலட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் எங்களோடு இணைந்து பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சி ஆனாலும் கூட, அது இலக்கியக் கட்சி. அது இலட்சியத்தை உணர்ந்த கட்சி, இலட்சியத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்ற கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அந்தப் பணியினை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று கருணாநிதி தெரிவித்தார்.