காவிரி பிரச்சனை.. அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்.. ஜவாஹிருல்லா #CauveryIssue
காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜவாஹிருல்லா அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும், அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது. சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்படுகிறது. அங்கு அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் ஓரணியில் நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் காவிரி நதி நீர் பாசனத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறது. 24 மாவட்டங்கள் காவிரியில் இருந்து வரும் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் கேட்டன. ஆனால் தமிழக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில்தான் திமுகவின் பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பொறுப்போடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். காவிரி பிரச்சனை தொடர்பாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழக அரசு சார்பாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேச வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசு இந்த தீர்மானங்களுக்கு செவி சாய்க்க வேண்டும்.
இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட உள்ளது. அப்போதாவது இப்போது வராமல் நின்று போன கட்சிகள் வர வேண்டும். தமிழகத்திற்கான ஒட்டு மொத்த பிரச்சனையான காவிரி பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகளின் குரல்கள் ஒன்றிணைந்து ஒலிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டார்.