கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ், பாஜக, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன், மத்திய அரசு என கட்சி பாகுபாடிந்றி அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்தி பாகுபாடற்ற பெரும் தலைவர் கருணாநிதி என்பதை பறை சாற்றினர்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வந்து கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் செந்தில் தொண்டமான் வந்திருந்தார். அதேபோல வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும் வந்திருந்தார்.
புதுவை அரசு சார்பில் முதல்வர் நாராயணசாமி, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மத்திய அரசு சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மமதா பானர்ஜி, பரூக் அப்துல்லா, டெரிக் ஓ பிரையன், சரத் பவார் போன்ற தலைவர்களும் கருணாநிதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கருணாநிதி உடல் அடக்கத்தில் கலந்து கொண்டு உருக்கமாக காணப்பட்டார். கருணாநிதியுடனான நட்புக் காலம் அவரது மனதுக்குள் ஓடியதை அவரது முகமே காட்டிக் கொடுத்தது.
மொத்தத்தில் பல்வேறு கட்சிகளும் கொண்டாடிய தலைவராக கருணாநிதி விளங்கினார் என்பதை இன்றைய நல்லடக்க நிகழ்வு எடுத்துக் காட்டியது.