22ம் தேதி கண்டன பொதுக்கூட்டம், 25ல் "பந்த்"..திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 30 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாள் தோறும் விதவிதமான போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நிர்வாண போராட்டம் நடத்தியும் தமிழக அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது.
அதிமுக, பாஜக - அழைப்பில்லை
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்காக அதிமுக, பாஜக தவிர்த்து இதர கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், முஸ்லிம் லிக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கலந்துகொண்டுள்ளன.
பாமக, தேமுதிக புறக்கணிப்பு
ஆனால் இந்த கூட்டத்தில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. விவசாயிகள் பிரச்னைக்காக திமுக சார்பில் தற்போது நடத்தப்படுவது மூன்றாவது அனைத்துக் கட்சி கூட்டமாகும்.
25இல் முழுஅடைப்பு - முடிவு
இதில் வரும் 25ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டும், அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
17 தீர்மானங்கள்
அவற்றில் 15 தீர்மானங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானதாகும். மற்ற இரு தீர்மானங்கள் மதுக்கடைகளை நீக்க வேண்டும் மற்றும் நீட் தேர்தவில் தமிழகத்தக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பனவாகும்
22ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்
25ஆம் தேதி நடைபெறவுள்ள முழுஅடைப்பு போராட்டம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.