ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்- சென்னையில் 9 கட்சி பிரநிதிகள் பங்கேற்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட 9 கட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் செலவீனங்கள் பற்றிய ஆலோசனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 270 க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
ஆனால் தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். அரசியல் கட்சிகளின் விளம்பர படம், சுவரொட்டிகளை அகற்றுவதில் தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த குறைகளை தவிர்க்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டினார்.
தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக் கூறினார்கள்.
சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் செய்யப்படும் தேர்தல் பிரசாரம் தேர்தல் செலவில் சேர்க்கப்படுமா? அரசியல் கட்சி அல்லாமல் தனி நபர் செய்யும் பிரசாரம் யார் செலவில் சேர்க்கப்படும் போன்ற கேள்விகளைச் சில கட்சி பிரதிநிதிகள் எழுப்பினார்கள்.
தேர்தல் நடத்தை விதிளை முழுமையாக கடைபிடிப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ராஜேஷ் லக்கானி கேட்டு கொண்டார். மேலும் தேர்தல் செலவு குறித்தும் அவர் விளக்கினார். அரசியல் கட்சி கணக்கில் சேர்க்கப்படும் செலவுகள், வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் செலவுகள் போன்றவற்றை அவர் விளக்கினார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், வக்கீல் பிரிவு செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச்செயலாளர் எம். ஜோதி, குமாரசாமி மற்றும் ரவீந்திரன், வக்கீல் சந்தோஷ் (தே.மு.தி.க.), சண்முகம், பாக்கியம் (மார்க்சிஸ்டு கம்யூ.), மூர்த்தி (இந்திய கம்யூ.), ரஜினிகாந்த், பாரதிதாசன் (பகுஜன் சமாஜ்கட்சி), ராகவன், பாலச்சந்திரன் (பா.ஜனதா), சாரதி, அபுபக்கர் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.