பொங்கிய மக்கள்.. போராட்டத்தில் மாணவர்கள்..ஆங்காங்கே தடியடி.. சூடாகும் மது விலக்குப் போராட்டம்
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி மாணவர்கள், பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் டவரில் ஏறி போராடிய போது, காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி போராட்டங்கள் வலுத்துள்ளது.
இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், சசிபெருமாள் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையிலும் இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டகளத்தில் மாணவர்கள்...
மதுவிலக்கு கோரி கல்லூரி மாணவர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூரில் திரு.வி.க. கலைக்கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம், கோவையில்...
சேலத்தில் சட்டக்கல்லூரிமாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் கோவையிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள்...
மாணவர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பூரண மதுவிலக்கு கோரி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடித்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக்...
ஆங்காங்கே பொதுமக்களால் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப் பட்டு வருகின்றன. விருத்தாசலத்தில் பூட்டிய மதுக்கடை மீது மக்கள் ஆவேசம் கொண்டு தாக்குதல் நடத்தினர். கடையின் கதவு, பலகைகளை அடித்து நொறுக்கினர்.
போலீசார் பாதுகாப்பு...
இதனால், திறந்திருக்கும் மற்றும் மூடியிருக்கும் டாஸ்மாக் கடைகளுக்குப் போலீசார் தேவையான பாதுகாப்பினை அளித்து வருகின்றனர்.
ஆதரவு திரட்டினர்..
இதற்கிடையே, தங்களது முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி, நேற்றே மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களிடன் நோட்டீஸ் அளித்து ஆதரவு திரட்டினர்.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்...
இதனால், நேற்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம், காந்திரோடு, மேட்டுத்தெரு, காவலான் கேட், ஒலிமுகமதுபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.